மேற்கிந்திய தீவுகள் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி உள்ளார். 11 பெண்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கயானாவில் உள்ள கெய்டர் நியூஸ் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசிய போது “ பெர்பைஸின் நியூ ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக அந்த கிரிக்கெட் வீரர் என்னை அழைத்து சென்றார்.. அப்போது எனக்கு 18 வயதுதான். என்னை மாடிக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த கிரிக்கெட் வீரர் குறித்து புகாரளித்த போதிலும், காவல்துறையினர் புகாரை ஏற்கவில்லை.” என்று தெரிவித்தார்.
இந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து பல பெண்களும் கிரிக்கெட் வீரர் குறித்து பாலியல் குற்றச்சாடுகளை முன்வைத்து வருகின்றனர். ஸ்கிரீன் ஷாட்கள், குரல் குறிப்புகள், மருத்துவ பதிவுகள் மற்றும் செய்திகள் போன்ற ஆதாரங்களை அவர்கள் வழங்கி உள்ளனர். மேலும் மீண்டும் மீண்டும் அந்த கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை மறைக்க முயற்சிகள் நடந்ததாகக் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தை தீர்க்க கிரிக்கெட் வீரர் பணம் வழங்கியதாக ஒருவர் தெரிவித்தார், ஆனால் எங்கள் குடும்பத்தினர் அதனை வாங்க மறுத்து, “எங்களுக்கு பணம் வேண்டாம். என் மகளுக்கு அவர் செய்ததற்கு நீதி வேண்டும்” என்று கூறினர்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட் வீரருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணையைத் தூண்டியதாகவும், வழக்குரைஞர்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் பின்னர் இந்த விஷயம் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது.” என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
கயானா காவல்துறை இந்த புகார்களை மறைக்க முயற்சிப்பதாகவும் பலர் குற்றம்சாட்டி உள்ளனர்., சிலர் கிரிக்கெட் வீரரின் குடும்பத்துடன் தொடர்புடைய செல்வாக்கு மிக்க நபர்களின் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள இந்த கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு டீன் ஏஜ் உறவினரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் பின்னர் தனது வாக்குமூலத்தை திரும்பப் பெற்றார், மேலும் வழக்கு மூடப்பட்டது; குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
குறிப்பாக, கிரிக்கெட் வீரர் 2024 ஜனவரியில் பிரிஸ்பேனில் உள்ள கபாவில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வரலாற்று வெற்றியைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். அவர்கள் கயானாவுக்குத் திரும்பியதும், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் அவருக்கு ஒரு ஹீரோவின் வரவேற்பு கிடைத்தது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்த புகார் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.