தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில் புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. 2022ல், மின் கட்டண உயர்வு தொடர்பான ஆணை வெளியிட்டபோது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், 2026 – 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் நாளை மறுநாள் ஜூலை 1ம் தேதி வருகிறது. இதையடுத்து மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் தயாராகி வருகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம். வீட்டு பயன்பாடு மின்சாரத்தில் ஒரு யூனிட்டிற்கு, 15 காசு முதல் 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இப்போது ஒருவர் ரூ.1000 மின்கட்டணம் செலுத்துகிறார் என்றால் அவர் வரும் மாதங்களில் கூடுதலாக ரூ.31.6 வரை செலுத்த வேண்டி இருக்கும்.
கடந்த ஆண்டு 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த முறை சற்று குறைவாக 3.16 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும் கூட ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்துவது மக்களை கூடுதல் செலவை ஏற்படுத்த உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4வது ஆண்டாக மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: மகிழ்ச்சி செய்தி…! தலைமை ஆசிரியர் பதவி உயர்வு… இவர்களுக்கும் 4% இட ஒதுக்கீடு…!