பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில், ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பொதுமக்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவான ஹஃபிஸ் குல் பஹதூர் எனும் ஆயுதப் படையின் தற்கொலைப் படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததோடு, கண்டனமும் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “வஜீரிஸ்தான் தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு வலுவான கண்டனம் தெரிவிக்கிறோம். இதுபோன்ற அறிக்கையை முழுமையாகவும், அவமதிப்புடன் நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இந்த குற்றசாட்டு ஏற்கனவே பதட்டமாக இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேலும் மோசமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை சுமார் 290 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும் கூறப்படுகிறது.