இந்தியாவில் பல முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இந்தியக் கிளையின் முன்னாள் தலைவரான சாகிப் நாச்சன், டெல்லி திகார் மத்திய சிறையில் உயிரிழந்துள்ளார்.
சிறையில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக சாஃப்தார்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத பாதையில் சென்ற பிசினஸ்மேன்: மகாராஷ்டிரா மாநிலம் பத்காவில் பிறந்த சாகிப் நாச்சன் (வயது 57), பிகாம் வரை கல்வி பெற்றவர். ஆரம்பத்தில் தனியார் வணிகத்தில் ஈடுபட்ட இவர், பின்னர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SIMI) வழியாக பயங்கரவாதத்திற்குள் நுழைந்தார்.
2001-ல் சிமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த பிறகு, அவர் ஐ.எஸ். (ISIS) அமைப்பின் இந்திய கிளையில் தீவிரமாகச் செயல்பட்டார். அதன் இந்திய தலைவராகவே பதவியற்று, இந்தியாவுக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார். தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தீவிரமாக செயல்பட்ட சாகிப் நாச்சன், 2002, 2003ல் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புகளை முன்னின்று நடத்தினான்.
முதலில் மும்பை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தது. இதில் 27 பேர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் வைல் பார்லே பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 25 பேர் காயம் அடைந்தனர். முலுண்ட் ரயில்வே ஸ்டேஷனில் நின்ற ஒரு ரயிலில் குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 82 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களின் மூளையாக இருந்த சாகிப் நாச்சனை போலீசார் கைது செய்தபோது, அவரிடம் இருந்து ஏ.கே-56 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் சாகிப் நாச்சனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிந்து 2017இல் சிறையிலிருந்து வெளியானவர், பின் புதிதாக சதி திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டார். குறிப்பாக, இந்துத்துவ அமைப்புத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த படுகொலைத் திட்டங்களை தீட்டியதாக தெரிகிறது.
2023ல் தேசிய புலனாய்வு அமைப்பான (NIA) அவர் மீதான புதுக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மீண்டும் கைது செய்தது. டெல்லி மற்றும் மும்பையில் அதி மோசமான குண்டு வெடிப்புகள் நடத்த திட்டமிட்டிருந்த சாகிப் நாச்சன், இந்த வழக்கில் திகார் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிரிழந்தார்.
சாகிப் நாச்சன் போன்ற பயங்கரவாதிகள், இந்தியாவில் உள்நாட்டுச் சுமைகள் மற்றும் சமுதாய விரிசல்கள் உருவாவதற்கு காரணமாக செயல்பட்டுள்ளனர். இவர்களின் இணைய வழித்தடங்கள், ஆயுதப் பயிற்சி முகாம்கள், தீவிரவாத சமூகவலை போன்றவை, தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகளால் கண்காணிக்கப்படுகின்றன.