கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அது உருமாறி பரவி வருகிறது. மேலும், இது உலகளாவிய கவலையாகவும் மாறியது. கொரோனா வைரஸ் ‘கொடிய டெல்டாவாக’ மாறியது. இது, உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் மற்றும் விஞ்ஞானிகள், மருத்துவ பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கடும் நெருக்கடியை சந்தித்தனர்.
கோவிட் ஒரு லேசான ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு மாறியதால், அறிகுறிகள் குறைவாக இருந்தன. மேலும், வைரஸ் பரவுவது பற்றிய அச்சமும் குறைந்தது. இந்நிலையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடுகளில் ஒன்று பிஏ 2.86 ஆகும். இந்த மாறுபாடு சுவாரஸ்யமானது. ஏனென்றால், இது 35 புதிய பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இது முன்னர் அறியப்பட்ட கோவிட் மாறுபாடுகளிலிருந்து வேறுபடுகிறது.
இதுகுறித்து கொரோனா வைரஸ் நிபுணர் டாக்டர் பவித்ரா வெங்கட கோபாலன் கூறுகையில், ”அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் பிற நாடுகளில் அதிகரித்து வரும் பிரோலா அல்லது பிஏ.2.86 மாறுபாடு, டெல்டாவில் இருந்து ஒமைக்ரானுக்கு ஏற்பட்ட மாற்றங்களைப் போல் தெரிகிறது. இந்த வைரஸின் தீவிரம் மற்றும் வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை நாங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த பிரோலா வைரஸ் தொடர்பில் 4 முக்கிய அறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது, அதிக காய்ச்சல், இருமல், ஜலதோஷம், சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். பொதுவாக, மாறுபடுகள் அடைய அடைய, வைரஸ்கள் வலுவிழக்கும். அதாவது, உயிரைப் பறிக்கும் அல்லது அவற்றின் திறன் குறையும். ஆனால், இந்த வைரஸ் எப்படிபட்டது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.