உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் 28 வயது நபர் ஒருவரின் ஆடு பக்கத்து வீட்டிற்கு சென்று சில பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால், பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இந்த சண்டையின் போது 31 வயது கங்காராம் சிங் என்பவர், ஆட்டு உரிமையாளரின் பிறப்புறுப்பை கடித்துள்ளார். இதனால், அந்த இளைஞர் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபரின் பிறப்புறுப்பில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், “எனது ஆடு கங்காராம் வீட்டிற்குள் தவறுதலாக நுழைந்து சில பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் என்னை கீழே தள்ளிவிட்டு எனது பிறப்புறுப்பை கடித்தார். இதனால் நான் மயங்கி விழுந்தேன்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது போலீசார் முதலில் புகாரை பதிவு செய்ய மறுத்தனர்” என கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த காயம் வெளிப்புறத்தில் தான் ஏற்பட்டுள்ளது. 4 தையல்கள் போடப்பட்டுள்ளது. அவரின் உயிர் நாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, அவரின் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.