சேலம் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் இந்த நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.
அதனடிப்படையில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை (https://eservices.tn.gov.in) என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்பதும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இனிவரும் காலங்களில் நத்தம் பட்டா மாறுதல் தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுக்க காத்திருக்கும் நிலையினை தவிர்த்து, பொதுமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.