புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார். அதில், தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய விதியாக, குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்திருக்க வேண்டும். 17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். குழந்தையின் பெயரில் ரூ.50,000 வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 22 குழந்தைகளுக்கு தலா ரூ.50,000 வழங்கினார்.