ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின், சேவாக் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களும் இரங்கல் செய்திகளை பதிவிட்டனர். இதையடுத்து, ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்தார். இதையடுத்து, பல பிரபலங்கள் இரங்கல் பதிவுகளை நீக்கினர்.
இந்நிலையில், ஹீத் ஸ்ட்ரீக் இன்று காலை உயிரிழந்ததாக அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று அதிகாலையில், என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பு மற்றும் என் அழகான குழந்தைகளின் தந்தை, தனது வீட்டில் இருந்து தேவதூதர்களுடன் இருக்க அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக அவரது மனைவியே உறுதி செய்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மிக முக்கிய வீரராக பார்க்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக், 1993இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 65 டெஸ்ட் போட்டிகளில் 1,990 ரன்களும், 216 விக்கெட்டுகளும், 189 ஒருநாள் போட்டிகளில் 2,943 ரன்களும், 239 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.
இவர், கடைசியாக கடந்த 2005இல் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். வங்காளதேசம், ஜிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில், இவரது மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.