ஈரானில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர், மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரான ஷிராஸ் நகர் பகுதியில் நேற்று காலை பேருந்து ஒன்று 55 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஃபார்ஸ் மாகாணத்தின் அவசரகால அமைப்பின் தலைவர் மசூத் அபேத் கூறினார்.
ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17,000 பேர் உயிரிழப்பை சந்திக்கும் ஈரான், சாலை மற்றும் தெரு விபத்துக்களில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்தல், பழைய வாகனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் போதுமான அவசர சேவைகள் இல்லாதது ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.