தமிழகத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஓட்டியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையி்ல தான் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த சுழற்சி உருவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பின்னர் இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, அதனை ஒட்டிய மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



