நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால், அடுத்தடுத்து 3 முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் விவாதத்துக்கு பிறகு இதர விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது” என்று உறுதி அளித்தார். இதை ஏற்று எதிர்க்கட்சியினர் அமைதி காத்தனர். அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 22 நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு இந்திய எல்லை பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.
வெளிநாட்டு (அமெரிக்க) அழுத்தம் காரணமாக போர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்திய ராணுவ டிஜிஎம்ஓ-வை பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொடர்பு கொண்டு போரை நிறுத்த கோரினார். இதன்பிறகு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது.
நாட்டின் நலன் மீது எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், எத்தனை பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் எத்தனை இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்புகின்றன. தேர்வு எழுதும்போது எத்தனை பென்சில், பேனா உடைந்தன என்பது முக்கியம் அல்ல. தேர்வில் வெற்றி பெறுவது தான் முக்கியம். ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவ தரப்பில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று அவர் பேசினார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்றும் மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது. இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் எனவும் மாலை பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Readmore: தோஷத்திலேயே பயங்கரமான கால் சர்ப்ப தோஷம்!. எப்படி தெரிந்துகொள்வது?. அறிகுறிகள், பரிகாரங்கள் இதோ!