தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த இரட்டை கொலை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்..
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்களில் வேல்முருகன் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.. இதில் அருள் ராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கண் பார்வையை இழந்துள்ளார்..
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அருள் ராஜின் வீடு அருகே கஞ்சா போதையில் தகராறு செய்துள்ளனர்.. இதை அருள் ராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.. அன்று நள்ளிரவே அந்த கும்பல் அருள் ராஜின் வீட்டிற்குள் புகுந்து அவரை குண்டுகட்டாக தூக்கு சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்..
சத்தம் கேட்டு பாண்டியன் அங்கு சென்ற நிலையில், அவரையும் அந்த கும்பல் தாக்கு கொலை செய்து, இருவரின் உடல்களையும் அங்கேயே புதைத்துள்ளனர்.
ஆனால் அருள் ராஜை காணவில்லை என்று உறவினர்கள் 3 நாட்களாக தேடிய நிலையில் நேற்றிரவு பண்டுகரை பகுதியில், புதைக்கப்பட்ட நிலையில் ஒரு கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்..
மேலும் பண்டுகரை ஓடை பகுதியில் வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது.. அப்போது அங்கு 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.. போலீசார் விசாரணை நடத்தியது அது அருள் ராஜ் மற்றும் அவரின் அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது.. இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த கொலை தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த இரட்டை கொலை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தூத்துக்குடி மாவட்டம் பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் பிரச்சினை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட மாரிப்பாண்டி, அருள்ராஜ் ஆகிய இரண்டு சகோதரர்களை, போதைக் கும்பல் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று, மண்ணில் புதைத்துள்ள செய்தி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
இதில், அருள்ராஜ், பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், எங்கும் எளிதில் கிடைக்குமளவுக்குப் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இதனால், பறிபோன உயிர்கள் ஏராளம். குறிப்பாக, கஞ்சா போதையில், பல கொலைகள் நடந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணமாகக் கஞ்சா புழக்கம் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு, கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை முதல் குமரி வரை, எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்கே கஞ்சா விற்பனை கோலோச்சுகிறது. தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ தெரியாமல் கஞ்சா விற்பனை நடக்கிறது என்பதைக் குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள். தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்களே.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம், விழுப்புரம் சூப்பர் மார்க்கெட் ஒன்றில்,இப்ராஹிம் என்பவர் கஞ்சா போதை ஆசாமிகளால் கொல்லப்பட்டது, கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கஞ்சா போதையில் புவனேஷ்குமார் என்ற கல்லூரி மாணவனைக் கொலை செய்தது, கஞ்சா வியாபாரப் போட்டி காரணமாக, சென்னை கொடுங்கையூரில் பிரபல ரௌடி கருப்பா என்ற ரகுபதி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டது, கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கஞ்சா கும்பலால் கொலை செய்யப்பட்டது, பெருங்களத்தூரில், கஞ்சா விற்பனைப் போட்டி காரணமாக இரட்டைக் கொலை, கடந்த ஜூன் மாதம், திருத்தணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் கொலை என, கஞ்சா புழக்கத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் கணக்கே இல்லை. தினமும் காலையில் கிளம்பி ஷூட்டிங் நடத்தச் சென்று கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? தன் வீடு, தன் குடும்பம் என்பது மட்டுமே நோக்கம் என்று வாழும் உங்கள் கையாலாகாத்தனத்தால் எத்தனை உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியுமா?” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : ஆள விடுங்க சாமி.. தேர்தலில் போட்டியிட நயினாரிடம் ‘நோ’ சொன்ன அண்ணாமலை.. என்ன காரணம்?