வார இறுதிநாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்கேற்ப சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 340 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், வரும் சனிக்கிழமை 350 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகள், சனிக்கிழமை 35 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 20 பேருந்துகள் என மொத்தம் 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.