கடலூர் மாவட்டத்தில் தனியாக வசித்து வந்த 50 வயதான செல்லம் என்ற பெண், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம். இவரின் கணவர் ராமர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். அவருக்கு சிலம்பரசன் மற்றும் சிற்றரசன் இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் மனைவிகள் திட்டக்குடியில் தனித்தனியாக வீடுகளில் வசித்து வருகின்றனர். இரு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், செல்லம் வீடு மற்றும் வயலை தனியாக பார்த்து வந்தார்.
இந்நிலையில் செல்லம் நேற்று மதியம் தனது வயலில் அரை குறை ஆடையில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கிடந்துள்ளார். அதனை பார்த்த பக்கத்து வயல் காரர் திட்டக்குடி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அதன் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன செல்லம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் தலையில் தாக்கி, பின்னர் கழுத்தில் குத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாலி சரடு, மூக்குத்தி, தோடு ஆகிய நகைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்ததால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நகைக்காக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம், ஊர்மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகள், கடந்த சில நாட்களிலான சந்தேகமான நபர்கள் வருகை, போன்ற அனைத்து வழிகளிலும் போலீசார் தீவிர விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Read more: ஆக.15-ல் கிராம சபை கூட்டம்.. உங்க கிராம வளர்ச்சி பற்றி நீங்களும் விவாதிக்கலாம்..!!