பலரின் ஆதரவை பெற்ற எதிர்நீச்சல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான குணசேகரனாக நடித்தவர் தான் நடிகர் மாரிமுத்து. தனது கதாபாத்திரத்தின் மூலம் எதிர்நீச்சல் சீரியலை பிரபலப்படுத்தியவர் மாரிமுத்து என்றே சொல்லலாம். இவருடையா “இந்தாம்மா ஏய்” வசனத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். அவரின் நகைச்சுவை, நக்கல் கலந்த வில்லத்தனம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்தது. அநேகரால் கொண்டாடப்பட்ட மாரிமுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மாரிமுத்து இல்லாமல் எதிர்நீச்சல் நாடகத்தின் நிலை என்னவாகும், அவர் இல்லாமல் தொடருக்கான டிஆர்பியும் குறையும் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது மாரிமுத்து இல்லாமல் வெளியாகும் முதல் டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வெளியான டிஆர்பியில் மாரிமுத்துவின் காட்சிகள் இருந்தது. ஆனால், இந்த வாரம் வெளியான எபிஸோடுகளில் மாரிமுத்துவின் காட்சிகள் வெகுவாகக் குறைந்திருந்தன. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் – கயல் ஆகிய இரு தொடர்களுக்கு இடையே முதலிடத்தைப் பிடிப்பதில் போட்டி நிலவும். ஆனால் கடந்த 2 வாரங்களாக எதிர்நீச்சல் முதலிடம் பெற்று வந்த நிலையில், நடிகர் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு தற்போது டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. எனினும் கடந்த இரு வாரங்களைப் போன்று இந்த வாரமும் எதிர்நீச்சல் தொடர் 10.79 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
கயல் தொடர் 10.74 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளது. சுந்தரி தொடர் (9.79 டிஆர்பி புள்ளிகள்) 3வது இடத்தையும், வானத்தைப்போல தொடர் (9.53 டிஆர்பி புள்ளிகள்) 4வது இடத்தையும் இனியா தொடர் (8.82 டிஆர்பி புள்ளிகள்) 5வது இடத்தையும் பெற்றுள்ளன.