கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இவர் வேறொரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவரை சந்தித்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்த நிலையில், நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்துள்ளனர். மாணவியை ஏமாற்றி தனியாக அழைத்துச் செல்வதை மாணவன் வழக்கமாக வைத்திருந்தான்.
இந்த நிலையில் மாணவனின் நண்பர் ஒருவர் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாணவன் மாணவியை அங்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளான். இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல பிளஸ்-2 படிப்பையும் முடித்து விட்டு மாணவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான். இந்த நிலையில் மாணவியின் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்த மாணவியின் தாய், அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் நடந்ததை எல்லாம் அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இது பற்றி உடனடியாக கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.