குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கும் திட்டம் வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பணிகளில் குரூப்-4 பிரிவில் உள்ள 10,205 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 10,205 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 12 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்; மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தரத்தில் பன்முகப் பணியாளர் பணிக்கான தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் என்ற இலக்கை தாண்டி, 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கும் திட்டம் வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 12,576 பேருக்கும், தற்போது 10,205 பேருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.