மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவி காலம் சில மாதங்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், 1997ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் சட்டத்தில் இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மகளிருக்கு வனத்துறை தவிர்த்து அனைத்து அரசுத் துறைகளிலும் 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. மாநிலத்தில் பாஜக அரசு பெண்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், காங்கிரஸும் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கிய இடம் கொடுத்து வருகிறது. 2 கட்சிகளும் பெண்களைப் பற்றிக் குரல் கொடுப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
புள்ளி விவரங்களைப் பார்த்தால், மாநிலத்தில் மொத்தம் 2.6 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். மேலும், இந்த வாக்கு வங்கியைக் கைப்பற்ற இரு கட்சிகளும் கடுமையாக முயற்சி செய்கின்றன. அந்த வகையில், மத்தியப்பிரதேச அரசு 35 சதவீத அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.