மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரிடம், ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது..
இந்த சூழலில் கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணிக்கு சென்ற வரலட்சுமி (30) மழைநீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தார்.. அவரின் கணவர் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாத நிலையில் வரலட்சுமி தான் தூய்மைப் பணி செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.. அவருக்கு ஒரு மகள், ஒரு மகன என 2 குழந்தைகள் உள்ளனர்..
ஆனால் துப்புரவு பணிக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. உயிரிழந்த பெண்ணுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது..
இதைத் தொடர்ந்து, வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப் பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.. மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்திற்கான காசோலையையும் அவர் வழங்கினார்.. குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்படும் என்று அமைச்சர் கூறினார்.. வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை தரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.. மேலும் வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச்செலவை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்..