மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் ரூபன்ராஜுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது. அப்போது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 சவரன் நகை கேட்டுள்ளனர். பெண் வீட்டார் திருமணத்தின் போது 150 சவரன் நகை போட்டதாகச் சொல்லப்படுகிறது.. திருமணத்திற்கு பிறகு 150 சவரன் நகை கேட்டு கணவன் குடும்பத்தினர் பெண்ணை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே திருமணம் நடந்து முடிந்து சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபன்ராஜ் – பிரியதர்ஷினி பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் மனமுடைந்த பிரியதர்ஷினி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நீண்ட நேரம் கதவி திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரியதர்ஷினி மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளை எடுத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெண்ணிடம் வரதட்சணையாக நகை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும் இதனால் அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள்போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அவரது கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன் மற்றும் மாமியார் தனபாக்கியம் ஆகியோருக்கு எதிராக மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, மதுரையில் அதே மாதிரியான, மேலும் மோசமான சம்பவம் மீண்டும் நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஒரே நாளில் 100 பேர்.. மாற்று கட்சியினரை கொத்தாக தூக்கிய செந்தில் பாலாஜி..!!