கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர் . ஆனால் ரூ.7 ஆயிரத்தை வருமான வரம்பாக கருதி, 10 சதவீத போனஸாக ரூ.8,400 அறிவிக்கப்பட்டது. திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், 10 சதவீத போனஸாக ரூ.15,444 வழங்க வேண்டும். ஆனால், ரூ.8,400 மட்டுமே அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி போனஸாக தங்களுக்கு 20 சதவீதம் வழங்கிட வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது. போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக ரூ.10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.