சென்னையில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனையில் மற்றும் சிறிய அளவிலான கிளினிக்குகளிலும் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த நோய் தொற்று காரணமாக சுவாச பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் இந்த சுவாச பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களாகவே சென்னையில் சிக்கன் குனியா காய்ச்சலும் பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு டெங்கு இல்லை என உறுதி செய்யப்பட்டால், அது சிக்கன் குனியாவாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர். நோயாளிக்கு 2 நாட்கள் தொடர் காய்ச்சல் இருக்கும். ஆனால், கடந்த 2007இல் சிக்கன் குனியா பரவி ஏற்பட்ட கடுமையான மூட்டு வலி தற்போது ஏற்படவில்லை. மூட்டு வலி 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 2-வது வாரத்தில் இருந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் உள் நோயாளிகளாகவும், சிலர் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களை கவனிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுவதால் குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் சேர்ந்து சுவாச பாதிப்பும், உணவு சாப்பிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படுகிறது.
மேலும், சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இருப்பினும் 3 நாட்களுக்கு மேல் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.