காசா மீது தரை வழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக தயாராகி விட்டதாகவும் இதற்காக லெபனான் எல்லை பகுதியில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் உக்கிரத்தை எட்டி உள்ள நிலையில் காசா பகுதியில் வாழும் 11 லட்சம் மக்கள் வெளியேற இஸ்ரேல் அவகாசம் வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று காசா மீது சரமாரி குண்டுமழையை இஸ்ரேல் போர் விமானங்கள் பொழிந்தன. இந்தநிலையில், காசா மீது தரை வழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக தயாராகி விட்டது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள நகரங்கள் அனைத்திலும் இஸ்ரேல் படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பதற்றம் உருவாகி உள்ளது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க இஸ்ரேல் ராணுவம் தரைவழித்தாக்குதலை எப்போது வேண்டுமானாலும் நடத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் யேவ் கேலண்ட் தெரிவித்தார். அங்கு விமானத்தாக்குதல் முடித்த பிறகு, உடனடியாக தரைவழித்தாக்குதல் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த போரில் இதுவரை 3,785 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் காசாவிற்குள் ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச்செல்லப்பட்ட 206 பேரின் குடும்பங்களும் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. காசாவின் பழைய நகரத்தின் அல்-ஜாய்துன் பகுதியில் தேவாலயத்தில் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை வைத்துள்ளனர்.
அங்குள்ள 200 பேரில் 30 பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் காணாமல் போன 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களின் இருப்பிடம் குறித்து அதிகாரிகளிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல் காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பில் 100 முதல் 300 பேர் வரை இறந்ததாக அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது.