ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் 3 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றவாளி என தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் நான்கு பேர் ஐந்து வெவ்வேறு குற்றங்களில் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு 27 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். பிரேசிலில் ஒரு முன்னாள் ஜனாதிபதி ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்படுவது இதுவே முதல் முறை.
போல்சனாரோ பிரேசிலியாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போல்சனாரோவுக்கு உரிமை உண்டு. நீதிமன்றம் தனது முடிவைப் பகிரங்கப்படுத்த 60 நாட்கள் ஆகும். அதன் பிறகு, அவரது வழக்கறிஞர் 5 நாட்களுக்குள் தெளிவுபடுத்தலுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேசமயம், தற்போதைய ஜனாதிபதி லூலா டா சில்வா, போல்சனாரோ பிரேசிலின் ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை மேற்கொண்டதற்கான “நூற்றுக்கணக்கான ஆதாரங்கள்” இருப்பதாகவும், இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
போல்சனாரோ, ஏற்கனவே மற்றொரு வழக்கில் 2030 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அது வெற்றிகரமாக அமைய வாய்ப்பு குறைவு என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போல்சனாரோவுக்கு நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தத் தீர்ப்பு “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இது ஒரு “சூனிய வேட்டை” (witch hunt) என்று குறிப்பிட்டுள்ளார்.



