ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில், வாழ்வின் துன்பங்களை களைந்து அருள்புரியும் புகழ்பெற்ற விநாயகர் திருத்தலமாக விளங்குகிறது. சென்னையிலிருந்து 175 கி.மீ.வும், திருப்பதியில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்தத் தலம், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
புராணக் கதையும் தெய்வீக அற்புதமும்: மூன்று மாற்றுத் திறனாளி சகோதரர்கள் ஒருவருக்குப் பேச முடியாது, இன்னொருவருக்கு காது கேட்காது, மற்றவரோ பார்வைக் குறைபாடு உள்ளவர். மூவரில் ஒருவர், மண்வெட்டி, கடைப்பாறையுடன் கிணற்றில் இறங்கி, அதை ஆழப்படுத்தும் வேலையைத் தொடங்கினார்.
மண்வெட்டி ஏதோ ஒரு கடினமான பாறையில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்து ரத்தம் வழிந்தது. அந்தச் சிலையை கண்டவுடனேயே மூவரின் குறைகளும் நீங்கிப் போனது. அதனைப் பார்த்த கிராம மக்கள், அந்த மூர்த்தி தெய்வீக சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து வணங்கத் தொடங்கினர். அந்த விநாயகரை வெளியில் எடுக்க அந்த ஊர் மக்கள் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதனால் ரத்தத்தை நிறுத்த மக்கள் இளநீரால் கிணற்றிலேயே அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகிலுள்ள காணியில் பாய்ந்ததால், அந்த ஊர் “காணிப்பாக்கம்” என்று அழைக்கப்பட்டது.
கோவிலின் அபூர்வ தன்மைகள்: இங்கு எழுந்தருளியுள்ள விநாயகர் சுயம்பு மூர்த்தி; மேலும், சிலை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே போகிறது. இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவர் அளித்த வெள்ளிக் கவசம் இன்று பொருந்தவில்லை. பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் சிறு அளவு தீர்த்தம் என்றாலும், அதன் மகிமை அளப்பரியது.
விநாயகர் முன் நின்று பொய்யுரைத்தால், 90 நாட்களில் தண்டனை தவிர்க்க முடியாது என்ற நம்பிக்கை காரணமாக, இங்கு சத்தியம் செய்வது பிரபலமாக உள்ளது. திருமணத் தடைகள் நீங்குதல், குழந்தைப் பேறு, நாக தோஷ நிவர்த்தி, துலாபாரம், அன்னப்ராசனம் போன்ற பல வேண்டுதல்கள் இங்கு நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
திருத்தலத்தின் சிறப்புகள்: அருமையாக எழுந்திருக்கும் வெண்ணிற ராஜகோபுரம், அழகிய திருக்குளம், விநாயகர் பூங்கா, மணிகண்டேஸ்வரர் சன்னதி, பெருமாள் கோவில் போன்றவை கோவிலின் ஆன்மிக அழகை உயர்த்துகின்றன. சமீபத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்டதால், கோவில் வளாகம் இப்போது மேலும் மிளிர்கிறது.
காணிப்பாக்கம் விநாயகர் நல்லவர்களுக்கு நல்லதும், கெட்டவர்களுக்கு கடும் பாடமும் புகட்டுவார் என பக்தர்கள் கருதுகின்றனர். எனவே, இவரை தரிசிப்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு ஆன்மிக மாற்றத்தை ஏற்படுத்தும் அரிய அருளாக கருதப்படுகிறது.



