தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக, தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மறுநாள் 13ஆம் தேதி கேதார கவுரி விரதம் என்பதால், அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பலதரப்பிலும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், தீபாவளிக்காக சொந்த ஊர்செல்பவர்கள் ஊர் திரும்ப வசதியாக அரசு அலுவலகங்கள், பொதுத்துறை அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு வரும் 13ஆம் தேதியும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதற்கிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, இன்று முதல் 11ஆம் தேதி வரை சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.