கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அரசியல் மற்றும் சமூக விமர்சகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, உயிரிழப்புகள் குறித்த தகவல் தெரிந்தும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் அவசரமாக சென்னைக்கு திரும்பியது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். “மக்களின் சாவு உன் கண்ணுக்கு தெரியவில்லையா? பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் உனக்கு கவலை தரவில்லையா? கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடும் கொலைகாரனுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?” என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தனை மரணங்களுக்கும் காரணமான விஜய்யை தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், விஜய் பேசுவதற்கு முன்பே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துவிட்டனர்.
விஜய்யின் பிரச்சார வாகனத்தில் இருந்த ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதைப் பார்த்தும், விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது தவறு. “கொண்டாட்ட மனநிலையும், எந்த விதிகளையும் பின்பற்றாத தொண்டர்களும், கூட்டத்தை பெரிதாகக் காட்ட வேண்டும் என்ற மாஸ் மனநிலையும் மட்டுமே இம்மரணங்களுக்கான முதன்மைக் காரணம். 10 ஆயிரம் காவலர்கள் இருந்திருந்தாலும், ஏன் துணை இராணுவமே வந்தாலும் ரசிக மனநிலையில் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது” என்று தெரிவித்துள்ளார்.



