விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, பல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், பயணியர் சிலர் டிக்கெட் எடுக்காமல் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல், முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இது, முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே, ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தெற்கு ரயில்வே பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதனை கண்காணிக்க 50 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.