ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியண்ண உடையாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், கால்நடைகளை மேய்க்கச் சென்ற ஒருவர், ஓரிடத்தில் மண் மேடு இருப்பதையும், நாய்கள் அங்கு துணியை இழுப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அதன் அருகே சென்று பார்த்தபோது, புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
இதனால் பதறிப்போன அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், மண்ணைத் தோண்டி சடலத்தை வெளியே எடுத்தனர். அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த சடலம், 4 அல்லது 5 நாட்களுக்கு முன் துணியால் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோபி ஏளூர் இந்திரா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்ராஜ் (32) என அடையாளம் காணப்பட்டார். சில நாட்களாக மாயமாகி இருந்த சின்ராஜின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சின்ராஜின் மனைவி அம்மாசையிடம் (30) போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
தம்பி முறையான கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவர் இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. அத்தாசி அருகே உள்ள பெருமாபாளையத்தைச் சேர்ந்த அம்மாசைக்கும், சின்ராஜுக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, பெருமாபாளையத்தில் நடந்த கோயில் திருவிழாவின் போது, அம்மாசைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது பெரியப்பா மகனான மாதேஷ் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது.
இந்த விஷயம் சின்ராஜுக்குத் தெரியவரவே, அவர் மனைவியைக் கண்டித்துள்ளார். கள்ளத்தொடர்பு கணவனுக்குத் தெரிந்துவிட்டதால், அவரை கொலை செய்தால் மட்டுமே சந்தோஷமாக வாழ முடியும் என கள்ளக்காதலன் மாதேஷிடம் அம்மாசை கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்த சின்ராஜை இருவரும் சேர்ந்து கடப்பாரையால் தாக்கி கொலை செய்து, சடலத்தை விவசாய நிலத்தில் புதைத்துவிட்டு சாதாரணமாக வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், சின்ராஜின் தாயார் குஞ்சம்மாள் என்கிற சதாமாரி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அம்மாசையுடன் மாதேஷும் தங்கி இருந்துள்ளார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொலையை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அம்மாசையையும், அவரது கள்ளக்காதலன் மாதேஷையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More : இதை கவனிச்சிருக்கீங்களா..? ரயில் நிலையங்களில் மெடிக்கல் ஷாப் ஏன் இல்லை..? பலருக்கும் தெரியாத தகவல்..!!