திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் ரமேஷ். பனியன் நிறுவனத்தில்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அங்காள ஈஸ்வரி(25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததால், அந்த குழந்தை இறந்து விட்டது.
இதனால் ரமேஷ் மற்றும் அங்காள ஈஸ்வரி ஆகியோர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரமேஷ் மற்றும் அங்காள பரமேஸ்வரி தம்பதி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு குடிபெயர முடிவு செய்தனர். இதன்படியே திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்துக்கு குடிபெயர்ந்தனா். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
ரமேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று, வழக்கம் போல் ரமேஷ் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அங்காள ஈஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர், குழந்தையை பறிகொடுத்த சோகத்தை நினைத்தபடியே இருந்ததாக தெரிகிறது. திடீரென அங்காள ஈஸ்வரி துப்பட்டாவால் தூக்கில் தொங்கிவிட்டார்.
இதைப்பார்த்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் உடனே அங்காள ஈஸ்வரியை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அங்காள ஈஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.