243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில், இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக எஞ்சிய 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தற்போது, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராகப் பதவி வகிக்கிறார். மறுபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சிக் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன.
இந்தச் சூழலில், INDIA கூட்டணியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஜார்க்கண்டில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பின்படி, அக்கட்சி பீகாரில் சக்காய், தம்தாஹா, பிர்பைன்டி, ஜமுய், மணிஹரி, கட்டோரியா ஆகிய பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள 6 தொகுதிகளில் களமிறங்க உள்ளது. இந்த 6 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 11ஆம் தேதி (இரண்டாம் கட்டத் தேர்தல்) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது.
Read More : தீபாவளிக்கு அதிரடியாக உயர்ந்த முட்டை விலை..!! கறிக்கோழி விலையும் டாப்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!



