விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணி என்பவரின் மகள் பவானி (வயது 17), சிவகாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி, வீரமணி தனது மனைவி ராதாவுடன் சேர்ந்து வீட்டில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, மாணவி பவானி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார்.
தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழையின் காரணமாக, எதிர்பாராத விதமாக வீட்டின் ஒரு பக்க மண் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த துயர நிகழ்வில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய பவானி படுகாயம் அடைந்தார். இதையடுத்து, உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மாணவி பவானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழையால் மண் சுவர் இடிந்து விழுந்து மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மா இலை டீ..? ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அதிசயம்..!!



