தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது..
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
மேலும் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப்பிரதேச கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



