கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம், நாட்டையே உலுக்கியது. அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்துயரச் சம்பவம் நடந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களை எழுப்பியது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ‘வீடியோ கால்’ மூலம் தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் அப்போது உறுதியளித்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் வைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதலில் பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், பனையூருக்கு பதில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் அக்.27ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறவுள்ளார்.
இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், அடுத்தக்கட்ட நகர்வுகளை மிகுந்த கவனத்துடன் விஜய் எடுத்து வைக்கிறார். புதிய பயணத்திட்டப் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் வெளிப்பகுதியிலும், பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்கூட்டங்களை நடத்த காவல்துறையினரின் அனுமதி கோரப்பட உள்ளது.
இதற்காக பொதுக்கூட்டங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்வது குறித்தும், உரிய அனுமதி பெறுவது குறித்தும் மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விரைவில் சென்னையில் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில், விஜய்யின் பிரசாரப் பயணத் திட்டம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.



