விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 110 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் மற்றும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் அக்ரிஸ் சோனந்தர் வெளிப்படையாக தெரிவித்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலரும் இதே கோரிக்கையை முன்வைத்து இருந்தனர். மறுபுறம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ‘தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. எங்கும் செல்ல மாட்டோம்’ என்று கூறியிருந்தனர். இதில் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது 30 இடங்களாவது கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார். எங்களுக்கு இருக்கும் டிமாண்டை வைத்து 25 சீட்டுகள் வரை கூட கேட்போம். நாங்கள் தான் கேம்சேஞ்சர். எங்கள் கூட்டணிக்காக எடப்பாடி பழனிச்சாமி கூட காத்திருந்தார். நாங்கள் வராததால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். விசிகவின் முக்கியத்துவம் திமுக தலைமைக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.



