சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் நேற்று தொழிலாளி ஒருவரை மறித்துத் தாக்கி, செல்போனை பறித்துச் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் குறித்த வழக்கில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அம்மாப்பேட்டை அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த அந்தக் கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆரம்பத்தில் இது சாதாரண வழிப்பறி வழக்காக கருதப்பட்டாலும், தீவிர விசாரணையில் முற்றிலும் வேறுபட்ட உண்மை வெளிவந்தது.
போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி செய்தியாளர்களிடம் கூறிகையில், புகாரளித்த நபரின் உண்மையான பெயர் பிரம்மநாயகம் (30). நெல்லையை சேர்ந்த இவர் சென்னையில் தச்சு வேலை செய்து வருகிறார். இவர், ஆன்லைன் வீடியோ கேம் மூலம் அறிமுகமான புதுச்சேரியை சேர்ந்த 15 வயதுப் பள்ளி மாணவி ஒருவரிடம், தனது பெயரை சுரேஷ் எனப் போலியாகக் கூறி பழகி வந்துள்ளார்.
பழக்கத்தின் தொடர்ச்சியாக, மாணவிக்கு மிகவும் மோசமான படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி பிரம்மநாயகம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, அதே கேம் மூலம் நண்பர்களான சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். மாணவியின் புகாரின் பேரில், ஒரு மாணவர் பெண் பெயரில் போலிக் கணக்கு தொடங்கி பிரம்மநாயகத்தைத் தொடர்பு கொண்டு, அவரை சேலத்திற்கு வரவழைத்தார்.
பின்னர், மேம்பாலத்தில் வைத்து, பிரம்மநாயகத்தைத் தாக்கி அவரிடமிருந்த செல்போனை பறித்து உடைத்தது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகாத செய்திகள் மற்றும் படங்களை முழுமையாக அழிக்கவே என்று மாணவர்கள் வாக்குமூலம் அளித்தனர். சிறுமியைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 3 கல்லூரி மாணவர்களும் அப்பாவிகள் என்பதால், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கமிஷனர் உறுதிப்படுத்தினார். ஆனால், புகார் கொடுத்த பிரம்மநாயகம் மீது, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அவர் மீது போக்சோ மற்றும் சைபர் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தலைமை மீது அதிருப்தி..? திமுகவில் சாரை சாரையாக இணைந்த அதிமுக நிர்வாகிகள்..!! அதிர்ச்சியில் இபிஎஸ்..!!



