அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஓபிஎஸ்.. உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கரம் கோர்த்துள்ளார்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உடன் தொடர்பு வைக்கக் கூடாதென பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டால் கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது செங்கோட்டையனுக்கு தெரியும்.. எனவே அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி கட்சி விதிகளின் படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.. செங்கோட்டையனை நீக்கியது நான் எடுத்த தனிப்பட்ட நடவடிக்கை என்பது போன்று பேசக்கூடாது..
செங்கோட்டையனை அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.. ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? ஜெயலலிதா இருந்தவரை 10 ஆண்டுகாலம் சென்னைக்கே வராதவர் செங்கோட்டையன். 10 ஆண்டுகாலம் வனசாசம் போனவர் எங்களைப் பற்றி பேசுவதா? அதிமுகவை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.. துரோகம் இழைத்தால் இதுதான் நிலைமை. துரோகம் செய்பவர்கள் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக கூற முடியும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தான் டிடிவி தினகரன்.. இவர் எங்கள் கட்சியை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.. 18 எம்.எல்.ஏக்களை கட்சியில் இருந்து அழைத்து சென்று துரோகம் செய்தவர்..
ஓபிஎஸ் தனது மகனோடு சென்று ஸ்டாலினை சந்தித்தார்.. ஜெயலலிதா இருந்திருந்தார்.. ஓபிஎஸ் அப்படி செய்திருப்பாரா? இவர்கள் எல்லாம் ஒன்றாக 2026 தேர்தலில் திமுகவின் பி டீமாக செயல்படுவது தான் இவர்கள் திட்டம்.. அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.. இவர்கள் இந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது கிடையாது.. அவர்களுக்கும் விசுவாசமாக இருந்தது கிடையாது.. ” என்று தெரிவித்தார்..



