பெண்களின் நிதி சுயமரியாதையும், சேமிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்க மத்திய அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமானதும், மிகுந்த வரவேற்பைப் பெற்றதுமானது மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Savings Certificate – MSSC) திட்டம் ஆகும்.
2023ஆம் ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டம், பெண்கள் தங்களின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். திருமணமான ஆண்கள் தங்களின் மனைவியின் பெயரில், இளம் வயதினர்கள் தங்களின் தாயின் பெயரில் கூட கணக்கு தொடங்கலாம்.
இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பு அரசு உறுதி வழங்கும் பாதுகாப்பும், 7.5% எனும் உயர்ந்த வட்டியும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சம் ₹2,00,000 வரை முதலீடு செய்யலாம். இரண்டு ஆண்டுகள் காலத்திற்குப் பிறகு திட்டம் முதிர்ச்சி அடையும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு வருடம் கழித்து 40% தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது. இதனால், அவசரநேரத் தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டாலும் சிக்கலின்றி பெறலாம்.
மிகவும் முக்கியமாக, ₹2 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகள் முடிவில் ₹2,32,044 பெறலாம். அதாவது, ₹32,044 வட்டி வருமானம். இது வங்கிக் கணக்குகளில் கிடைக்கும் சாதாரண வட்டியை விட அதிகம். இந்தத் திட்டத்தின் மற்றொரு நன்மை, அது அரசுத் திட்டம் என்பதால் முழுமையான நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு வழங்குகிறது.



