திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட விடுதலைத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா. இவரிடமிருந்து, இயக்குநரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா கடந்த 2012-ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்ராவிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கஸ்தூரி ராஜா வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து, அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் கீழமை நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி கஸ்தூரி ராஜாவை விடுவித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து முகுந்த் சந்த் கோத்ரா மேல்முறையீடு செய்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது அவர் மரணம் அடைந்ததால், அவரது மகன் ககன் போத்ரா வழக்கைத் தொடர்ந்து நடத்தினார்.
வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, புகார் மற்றும் ஆதாரங்களில் பல முரண்பாடுகள் இருப்பதை குறிப்பிட்டார். மேலும், கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலைத் தீர்ப்பில் எந்தவித பிழையும் இல்லை எனக் கூறி, ககன் போத்ராவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார். கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காசோலை மோசடி வழக்கு கடைசியாக முடிவுக்கு வந்துள்ளது.
Read more: குரு பலமாக இருந்தால், ஒரு போதும் இழப்பு இல்லை! இந்த 4 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான்.!



