திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வயலாநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் எரிவாயுக் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து அனுப்பும் பணி இந்த மையத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை வழக்கம் போல ஊழியர்கள் சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுத் தீப்பிடித்தது.
இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து அலறியடித்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. எனினும், சமையலறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மளிகைப் பொருட்கள் மற்றும் சமையல் சாதனங்களில் தீ மளமளவெனப் பரவி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஆவடி மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடித் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், சுற்றுவட்டார மக்கள் அச்சமடைந்தனர். தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து வெள்ளவேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : ஓரினச்சேர்க்கைக்கு ஆசையோடு போன இளைஞர்.. காட்டுக்குள் கதறவிட்ட கும்பல்..!! ஆடிப்போன சென்னை ஐடி ஊழியர்..!!



