தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜயுடன் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இளம் தலைமுறையினருக்கும், புதிய முகங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. ஆனால், அமைச்சர்கள் பதவியேற்று ஐந்து நாட்கள் ஆகியும் இலாகாக்கள் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. முக்கிய துறைகள் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், “அமைச்சர்கள் பதவியேற்றும் அதிகாரப்பூர்வ பொறுப்புகள் வழங்கப்படவில்லை”, “ஆட்சியின் ஆரம்பத்திலேயே குழப்பம் நிலவுகிறது” என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதேசமயம், தவெக தரப்பினர் இது வழக்கமான நிர்வாக நடைமுறை என்றும், விரைவில் அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
Read more: இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் வீட்டுக் கடன் பெறாதீர்கள்..!



