உத்தரப் பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபருக்கு, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது வைரலாகி வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் அன்மோல் சிங். இவர் கடந்த 4ம் தேதி புதிய மண்டி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அங்கு வாகனத் தணிக்கையில் இருந்த எஸ்.ஐ.யிடம் மாட்டிக்கொண்டுள்ளார். அன்மோல் சிங்கிடம் இருசக்கர வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, உரிமம் அல்லது வாகன ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்காக ரூ.20.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ரசீதை பார்த்த அன்மோல் சிங், அபராத தொகையை பார்த்து அதிர்ச்சியடைந்தர். ஏனென்றால், அவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் மதிப்பே, 1 லட்சம் ரூபாய் என்ற நிலையில், ரசீதில், 20 லட்சத்து, 74,000 ரூபாய் அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், அந்த ரசீதை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரலானதையடுத்து வாகன ஓட்டிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து முசாபர்நகர் போக்குவரத்து எஸ்.பி., விளக்கமளித்துள்ளார், அதில், அபராதம் விதித்த எஸ்.ஐ.,யின் தவறால் இந்த பிழை ஏற்பட்டது. அந்த வழக்கில் மோட்டார் வாகனச் சட்டத்தின், 207 பிரிவு பயன்படுத்தப்பட்டது. ஆனால், எஸ்.ஐ., 207க்குப் பின் ‘எம்.வி., ஆக்ட்’ என்று குறிப்பிட மறந்துவிட்டார். இதனால், ‘207’ மற்றும் இந்தப் பிரிவின் குறைந்தபட்ச அபராதத் தொகையான, 4,000 ரூபாய் சேர்ந்து, 20,74,000 ஆகிவிட்டது. அது திருத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.
Readmore: கொல்கத்தாவில் அடுத்த கொடூரம்!. 4 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை!. உடல்நிலை கவலைக்கிடம்!



