தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைவரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த தேர்தலில் முதல் முறையாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணுகின்ற நிலையில், வழக்கத்திற்கு மாறாக வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை (NRIs) நோக்கி அழைப்பு விடுத்ததே இதற்கு காரணம்.
இதன் விளைவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமான பயண டிக்கெட் பதிவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. பலர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வர திட்டமிடுகின்றனர். விஜய்க்காக தாங்கள் ஓட்டுப் போட தமிழ்நாட்டுக்கு வருவதாக தங்கள் விமான டிக்கெட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வெளி நாட்டில் இருந்து இந்தியா வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. டிக்கெட் விலை குறைந்தது ஒன்றரை லட்சம் வரை இருக்கும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜயின் வேண்டுகோளை மட்டும் ஏற்று “விஜய் அண்ணா.. இது எல்லாம் உங்களுக்காக” என கூறி விமான நிலையில் இருந்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்து வெளியான சர்கார் திரைப் படத்தில் விஜய் தனது வாக்கை செலுத்த வெளிநாட்டில் இருந்து பல லட்ச ரூபாய் செலவு செய்து வாக்கு செலுத்த வருவார். ஒரு வாக்கின் மதிப்பு குறித்து அந்த திரைப்படத்தின் மையக் கருத்தாக இருக்கும். தற்போது அதே பாணியில் தனது ஜனநாயக கடமையாற்ற வெளிநாட்டில் இருந்து இளைஞர்கள் தமிழகம் வருகின்றனர். இது இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.



