இந்திய வீடுகளில் இன்றியமையாத பொருளாக இருக்கும் சீலிங் ஃபேன்கள், வெப்பத்தை தணித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்தி, குறைந்த செலவில் வசதியை வழங்குகின்றன. நவீன BLDC (Brushless DC) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேன்கள், பாரம்பரிய மாடல்களைவிட 50% வரை மின்சாரத்தை சேமிக்கின்றன. ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட் ஹோம் இணைப்பு போன்ற அம்சங்களுடன், இவை தற்போது வீட்டு அலங்காரத்தின் ஒரு அங்கமாகவும் மாறியுள்ளன.
இருப்பினும், வீடுகளிலும் அலுவலகங்களிலும் சீலிங் ஃபேன்களை மணிக்கணக்கில் இடைவிடாமல் இயக்குவது மின்சார விரயம் முதல் உடல்நலப் பாதிப்புகள் வரை பல சிக்கல்களை உருவாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மின்சார செலவும் ஆயுட் குறைப்பும்: பழைய மாடல் ஃபேன்கள் அதிக மின்சாரம் நுகர்வது மின் கட்டணத்தை உயர்த்துகிறது. தொடர்ந்து இயங்கும் ஃபேன்களின் மோட்டார் அதிக வெப்பமடைந்து, அதன் ஆயுட்காலம் குறையவும், அடிக்கடிப் பழுதடையவும் வாய்ப்புள்ளது.
உடல்நல பாதிப்புகள்: நீண்ட நேரம் ஃபேன் காற்று உடலில் நேரடியாகப் படுவது தோல் வறட்சி, மூட்டு வலி மற்றும் சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்கலாம். குறிப்பாக, இரவு முழுவதும் அதிக வேகத்தில் ஓடும் ஃபேன் காற்று, உடலில் ஈரப்பதத்தைக் குறைத்து, மூக்கு மற்றும் தொண்டையில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஒவ்வாமை மற்றும் இரைச்சல்: ஃபேன் இறக்கைகளில் படியும் தூசி, தொடர்ந்து இயங்கும்போது காற்றில் பரவி, ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளைத் தூண்டலாம். மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் உராய்வு அதிகரித்து, ஃபேன் சத்தத்துடன் கூடிய அதிர்வை உருவாக்கி, வீட்டின் அமைதியைக் குலைக்கவும் வாய்ப்புள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, மின்சார செலவையும் உடல்நலப் பாதிப்புகளையும் தவிர்க்க, ஃபேனை அவசியமான நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். அத்துடன், அவ்வப்போது தூசி துடைத்துச் சுத்தம் செய்வது, ஆற்றல் திறன் கொண்ட (BLDC) மாடல்களைத் தேர்ந்தெடுப்பது, மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை தொழில் வல்லுநரை கொண்டு பரிசோதிப்பது ஆகியவை அதன் ஆயுளை நீட்டிக்க உதவும்.



