குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளாக உள்ள பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தருமபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மற்றும் தருமபுரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதரார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையத்தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விவரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தருமபுரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 2-வது தளம், பழைய வட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (அஞ்சல்), தருமபுரி 636 705, கைப்பேசி எண் – 9384824260 என்ற முகவரியில் இயங்கி வரும் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலோ (தொலைபேசி எண்: 04342-232311) தொடர்பு கொண்டு பயன்றெலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



