நம் நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து வலையமைப்பாகத் திகழ்வது இந்திய ரயில்வே. இந்தியாவின் எந்த மூலையிலும் ரயில் சேவை கிடைக்கும்படி விரிவாக அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் நெருங்கி வருவதால், பல குடும்பங்கள் சுற்றுலா திட்டங்களை முடிவுசெய்து வருகின்றன. ஆனால், செல்லப்பிராணிகளை என்ன செய்வது? என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர்.
சிலர் அவற்றை வீட்டில் வைத்துச் செல்ல முடியாமல், தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். ரயில் பயணத்தில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லலாமா? எப்படி எடுத்துச் செல்ல வேண்டும்? என்ன விதிமுறைகள்? என்பது தான் பலரது கேள்வி. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விதிகள் என்ன சொல்கின்றன? இந்திய ரயில்வே விதிகளின்படி, செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல அனுமதி உண்டு, ஆனால் அதற்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக நாய்கள், பூனைகள் போன்ற சிறிய செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லும் போது பயணிகள் கண்டிப்பாக தனி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், எல்லா பிரிவுகளிலும் செல்லப்பிராணிகளுக்கு அனுமதி இல்லை. ஸ்லீப்பர், த்தர்டு ஏசி (3AC), செக்கண்ட் ஏசி (2AC) ஆகிய பிரிவுகளில் செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பயணிகளுக்கு செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல முதல் ஏசி (First Class AC) பிரிவில்தான் அனுமதி உள்ளது.
பயணிகள் கீழ்கண்ட முறையில் முன்பதிவு செய்யலாம்:
* 4 பேர் உட்காரும் கூபேவை முழுவதும் முன்பதிவு செய்தால், செல்லப்பிராணிகளை உங்களுடன் சேர்த்துச் செல்லலாம்.
* அல்லது 2 பேர் உட்காரும் கூபேயை முழுமையாக முன்பதிவு செய்தாலும் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்யலாம்.
ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய விரும்புகிற பயணிகள், முழு கேபினையும் ஆக்கிரமிக்க வேண்டுமெனில், அதற்கான கோரிக்கையை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அல்லது பொது மேலாளர் (GM) அலுவலகத்திற்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் ரயில்வே அதிகாரிகள் அந்த கோரிக்கையை பரிசீலித்து அனுமதிப்பார்கள்.
செல்லப்பிராணி டிக்கெட்டை IRCTC-ல் எப்படி முன்பதிவு செய்வது? இப்போது IRCTC-யில் நாய்/பூனை டிக்கெட்டையும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி உள்ளது.
முன்பதிவுக்கான படிகள்:
- IRCTC இணையதளத்திற்குச் செல்லவும்
- ‘Trains’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்
- அங்குள்ள Dog / Cat Booking விருப்பத்தை கிளிக் செய்யவும்
- அதனால் நீங்கள் ரயில்வே பார்சல் (Luggage) வலைத்தளத்திற்கு மாற்றப்படுவீர்கள்
- அங்கு:
- உங்கள் மொபைல் எண்
- OTP
- மின்னஞ்சல் ஐடி
- முன்பதிவு செய்த PNR எண் ஆகியவற்றை வழங்க வேண்டும்
- உங்கள் PNR-க்கு பட்ட பெர்த் செல்லப்பிராணி பயணத்துக்கு தகுதியானதா? என சிஸ்டம் சரிபார்க்கும்
- பின்னர் நீங்கள் எத்தனை நாய்கள் அல்லது பூனைகளை எடுத்துச் செல்லப்போகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்
- Payment செய்வதற்கு ‘Pay’ பொத்தானை கிளிக் செய்யவும்
- பணம் செலுத்தப்பட்டவுடன், நீங்கள் Luggage Ticket Number பெறுவீர்கள்
- அந்த விவரம் உங்கள் மின்னஞ்சல்-லுக்கும் அனுப்பப்படும்
ரத்து செய்தால் பணம் திரும்புமா? பயணத்தை ரத்து செய்தால், உங்கள் பயண டிக்கெட் (berth) பணம் மட்டும் திருப்பிக்கொடுக்கப்படும். செல்லப்பிராணிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட Luggage Ticket-க்கு பணம் திரும்ப வழங்கப்படாது.



