நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகளவில் நடைபெற்று வரும் போர் போன்றவை காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 1 லட்சத்தை தொடும் நிலைக்குச் சென்றுள்ளதால் எளிய மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக உள்ளது. இதற்கிடையே நகைப் பறிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சிலருக்கு இழந்த நகை திரும்ப கிடைக்கிறது. பலருக்கு இழந்த நகை மீண்டும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.. ஒரு பெண்ணின் நகை பறிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டாலும், குற்றவாளி யார் என்பதே தெரியாத நிலையில் வழக்கு விசாரணை நிழுவையில் இருக்கிறது. ஆனால் “குற்றவாளி பிடிபடுகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம்; ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி, மதுரை உயர் நீதிமன்ற கிளை ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
மதுரை எஸ்.எஸ் .காலனியை சேர்ந்த சுஜா சங்கரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்,” கடந்த நவம்பர். 2015ம் அன்று என் வீட்டை உடைத்து சுமார் 75 பவுன் நகை மற்றும் ரூ. 1.39,000/- பணமும் கொள்ளையடித்து சென்று விட்டனர். சுமார் ஒன்பது வருடங்கள் ஆகியும் குற்றவாளிகளையோ எனது திருட்டுப் போன ஆபரணங்களையும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட பொழுது, குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை எனக் கூறி எனது வழக்கை முடித்து விட்டனர். எனக்கு எந்த ஒரு நோட்டீசும் கொடுக்காமல், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டனர். எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றி திருடு போன நகையை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. நகை மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், பல ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்குகளை கிடப்பில் வைக்கும் காவல்துறை நடைமுறையை மதுரை உயர் நீதிமன்ற கிளை கடுமையாக விமர்சித்துள்ளது.
நகை திருட்டு புகார்கள் தொடர்பாக பல மனுக்கள் தொடர்ந்து உயர் நீதிமன்றத்துக்கு வருவது கவலைக்குரியது என்றும், இது காவல்துறையின் விசாரணை செயல்திறன் குறித்து கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார். தனது உத்தரவில், நகை திருட்டு புகாரில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை, நகைகளை மீட்க இயலவில்லை என போலீசார் பதிவு செய்த நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலவரம்பிற்குள், திருடுபோன நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீதம் தொகையை தமிழக அரசு, புகார்தாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கண்டுபிடிக்கப்படாமல் கிடப்பில் உள்ள நகை திருட்டு வழக்குகளின் நிலவரம் குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ADSP தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். நகை திருட்டு வழக்குகளை விசாரித்து கண்டுபிடிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் திறமைமிக்க காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு காவல் பிரிவு அமைக்க வேண்டும்.
புகார்தாரருக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் ஆகியவை, நவீன ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு, கால இடைவெளிகளில் தொழில்நுட்ப புத்துணர்வு (Refresher) பயிற்சி வழங்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க, நகை திருட்டு வழக்குகளில் காவல்துறையின் பொறுப்புணர்ச்சி அதிகரிக்க வேண்டிய அவசியத்தை இந்த உத்தரவு வலியுறுத்துகிறது.



