இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகத் திகழும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவு கசிவுகளை தடுக்கும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான மாற்றத்தை வரும் டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்போது, இனிமேல் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் அச்சிடப்படாது என்று UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் சமீபத்தில் ஆன்லைன் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
தற்போது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பணிகளுக்காகப் பொதுமக்களிடம் ஆதார் அட்டை நகல்கள் கோரப்படுகின்றன. குறிப்பாக, ஓட்டல்கள், மொபைல் போன் சிம் விற்பனையாளர்கள், கருத்தரங்குகளை நடத்துபவர்கள் போன்றவர்களுக்கு ஆதார் விவரங்கள் கிடைக்கின்றன. இந்த விவரங்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாகத் தனிநபர்களின் தரவுகள் கசிந்து, பெரிய நிதி இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த அபாயங்களைத் தடுக்கவே UIDAI புதிய விதிமுறைகளையும் மாற்றங்களையும் கொண்டு வர முடிவெடுத்துள்ளது.
ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, UIDAI இரண்டு கட்டங்களில் மாற்றங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது:
புதிய ஆதார் செயலி : முதல் கட்டமாக, தற்போது நடைமுறையில் உள்ள ‘mAadhaar’ செயலிக்குப் பதிலாக, முற்றிலும் புதிய ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், இனி எந்த இடத்திலும் பொதுமக்கள் தங்கள் ஆதார் காகித நகலை (ஜெராக்ஸ்) கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆதார் விவரங்களைச் செயலி வாயிலாகவே டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக அளிக்க முடியும்.
அட்டையின் வடிவமைப்பு மாற்றம் : அடுத்த கட்டமாக, ஆதார் அட்டையில் அதன் வடிவமைப்பு மாற்றப்படும். இனிமேல், அட்டையில் புகைப்படம் மற்றும் கியூஆர் கோடு (QR Code) மட்டுமே அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
கியூஆர் கோடில் பாதுகாப்பு :
புதிய ஆதார் அட்டையில் 12 இலக்க எண் அச்சிடப்படாது. எனினும், அட்டைதாரரின் பெயர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால், முகவரி நிச்சயமாக அச்சிடப்படாது.
பிரத்யேக ஸ்கேனிங் : இந்த கியூஆர் கோடை UIDAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேகச் செயலி அல்லது கருவியால் மட்டுமே ஸ்கேன் செய்து தகவல்களைப் பெற முடியும். சாதாரண சாதனங்கள் மூலம் இந்தத் தரவை அணுக முடியாது.
இந்த மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மூலம், தனிநபர் விவரங்களை எளிதில் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்றும், ஆன்லைன் மோசடிகள் பெருமளவில் தடுக்கப்படும் என்றும் UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



