சாதாரணமாக நீங்கள் ரயில் பயணம் செய்யும்போது கட்டாயம் டிக்கெட் எடுத்தாக வேண்டும். டிக்கெட் எடுக்கவில்லை என்றால் அபராதம் மற்றும் சிறை தண்டனை கூட பெற நேரிடும். ரயில்நிலையத்தில் இருக்கும் நடைமேடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட அதற்கான டிக்கெட் எடுத்து தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் மட்டும் இந்த விதிகளுக்கெல்லாம் விதிவிலக்கு.
பக்ரா–நங்கல் என்ற இந்த ரயில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரூபாய்கூட கட்டணமின்றி இயக்கப்படுகிறது. பஞ்சாபின் நங்கல் நகரத்தையும், இமாச்சலப் பிரதேசத்தின் பக்ரா பகுதிக்கும் இணைக்கும் இந்த ரயில், இன்று வெறும் ஒரு போக்குவரத்து வசதி அல்ல; ஒரு வரலாற்றுச் சின்னம். பக்ரா–நங்கல் அணை கட்டுமான காலத்தில், தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த ரயில், காலப்போக்கில் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
13 கிலோமீட்டர் தூரம், சுமார் 30 நிமிட பயணம். சிவாலிக் மலைத் தொடர்களின் இயற்கை அழகில், சுரங்கப் பாதைகள், உயரமான பாலங்கள் வழியே செல்லும் இந்த ரயில், பயணிகளை வெறும் இடமாற்றம் மட்டுமன்றி இயற்கையுடனான அனுபவத்தையும் கொடுக்கிறது. தினமும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் கிராமவாசிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ரயிலை தங்களின் நம்பகமான பயணமாக பயன்படுத்துகின்றனர்.
இந்த ரயில் முதலில் நீராவி என்ஜின்களால் இயக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் மூலம் இயக்கப்படுகிறது. கராச்சியில் தயாரிக்கப்பட்ட மரப்பெட்டிகள் மூலம் ரயில் பெட்டிகள் இருக்கும். காலனித்துவ காலத்தை நினைவூட்டும் இந்த ரயில் தொழில்நுட்ப ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் தனித்துவம் பெற்றது. “லாப முதன்மை” என்ற நவீன நிர்வாக சிந்தனைகளுக்கு மத்தியில், சமூக பயன்பாடு என்ற அடிப்படை கோட்பாட்டை உயிரோடு நினைவூட்டுகிறது.
Read more: ஆதாரில் வருகிறது அதிரடி அப்டேட்..!! இனி எல்லாமே QR கோடு தான்..!! டிசம்பர் முதல் அமல்..!!



